இங்கு போர்க்குற்றங்கள் எதுவுமே நடக்கவில்லை! – ரணில் நாட்டைக் காட்டிக் கொடுத்துவிட்டார் என மஹிந்த கொந்தளிப்பு

“போர்க் காலகட்டத்தில் எந்தச் சந்தர்ப்பத்திலும் போர்க்குற்றம் என்று எதுவும் இடம்பெறவில்லை. ஒரு சில சந்தர்ப்பங்களில் தனிப்பட்ட நபர்களால் சில குற்றங்கள் இடம்பெற்றிருப்பின் அதற்கு நாம் நடவடிக்கை எடுத்துள்ளோம். ஆனால், இவை போர்க்குற்றம் அல்ல. இவ்வாறான நிலையில் வடக்கில் சென்று தமிழ் மக்கள் மத்தியிலேயே போர்க்குற்றம் இடம்பெற்றதாக பிரதமர் ரணில் கூறுகின்றமை எமது நாட்டை சர்வதேச சமூகத்திடம் காட்டிக்கொடுத்தமைக்கு ஒப்பானது.”

– இவ்வாறு முன்னாள் ஜனாதிபதியும் எதிர்க்கட்சித் தலைவருமான மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் முன்னணியின் 22 ஆவது பொதுக்கூட்டம் கொழும்பு நகர மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“இந்த நாட்டில் நிலவிய மோசமான போரை முடிவுக்கு கொண்டுவந்து 10 ஆண்டுகள் நிறைவடைகின்றன. அன்று இருந்த சூழலில் இருந்து நாடு முற்றாக விடுபட்டுள்ளது.

இந்நிலையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஒரு சில நாட்களுக்கு முன்னர் வடக்குக்கு பயணம் மேற்கொண்டு வடக்கில் வைத்தே வடக்கில் போர்க்குற்றம் இடம்பெற்றது என்று கூறியுள்ளார். அதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் வசை பாடியுள்ளார். பிரதமரே குற்றத்தை ஏற்றுக்கொண்டுள்ளதால் ஜெனிவாவில் எமக்கு சாதகமாக செயற்பட முடியும் என்று கூறியுள்ளார். ஆகவே, இவர்களின் நோக்கம் என்ன என்பது இன்று தெட்டத்தெளிவாக விளங்குகின்றது.

போர்க் காலகட்டத்தில் எந்தச் சந்தர்ப்பத்திலும் போர்க்குற்றம் என்று எதுவும் இடம்பெறவில்லை. ஒரு சில சந்தர்ப்பங்களில் தனிப்பட்ட நபர்களால் சில குற்றங்கள் இடம்பெற்றிருப்பின் இராணுவத்தால் குற்றம் இடம்பெற்றிருந்தால் அதற்கு நாம் நடவடிக்கை எடுத்துள்ளோம். ஆனால், இவை போர்க் குற்றம் அல்ல.

இன்று காஷ்மீர் பிரதேசத்தில் நிலைமையைப் பாருங்கள். இவ்வாறான மோசமான நிலைமைதான் இலங்கையிலும் நிலவியது. நாம் போரை முடிவுக்குக் கொண்டுவந்திருக்காது போயிருந்தால் இன்றும் இலங்கை அவ்வாறான நிலமையிலேயே இருந்திருக்கும். எனினும், நாம் அவ்வாறான நிலைமைகளில் இருந்து நாட்டை மீட்டெடுத்ததும், பயங்கரவாதத்தை முற்றாக அழித்ததும் போர்க்குற்றம் அல்ல.

பயங்கரவாதிகளுக்கு எதிராக நாம் போராடினோமே தவிர தமிழ் மக்களுக்கு எதிராகவோ அல்லது முஸ்லிம் மக்களுக்கு எதிராகவோ நாம் போர் செய்யவில்லை” – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *