ரணிலுக்கு எதிராக மைத்திரி அரசியல் போர் தொடுப்பு!
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தனது பதவிநிலையை மறந்து, ஐக்கிய தேசியக் கட்சிக்கு எதிராக அரசியல் போர்தொடுக்கின்றார் என்று ஐ.தே.கவின் பின்வரிசை எம்.பிக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
”தமது கட்சித் தலைவரான ரணில் விக்கிரமசிங்கவை விமர்சிப்பதற்கு ஜனாதிபதிக்கு எவ்வித அருகதையும் கிடையாது” என்றும் பின்வரிசை எம்.பிக்கள் சுட்டிக்காட்டினர்.
ஐக்கிய தேசியக் கட்சிக்கு அந்தக் கட்சியின் தலைவர், தலைமை தாங்கவில்லை என்று ஜனாதிபதி கொழும்பில் நேற்று நடந்த மக்கள் ஐக்கிய முன்னணியின் 22 ஆவது ஆண்டு மாநாட்டில் உரையாற்றியபோது விமர்சித்திருந்தார்.
அதுமட்டுமல்ல ரணில் விக்கிரமசிங்கவின் தலைமைத்துவத்தை ஜனாதிபதி சிறிசேன, கடந்தகாலங்களிலும் கடுமையாக விமர்சித்தார். இதற்கு ரணில் வெளிப்படையாக பதிலடி கொடுக்கவில்லை.
இந்நிலையிலேயே, ஜனாதிபதியின் நேற்றைய உரையால், ஐ.தே.கவிலுள்ள ரணிலின் விசுவாசிகள் சினமடைந்துள்ளனர்.