பிரதமர் மஹிந்த உள்ளிட்ட 49 அமைச்சர்களுக்கும் இடைக்காலத் தடை! – மேன்முறையீட்டு நீதிமன்றம் அதிரடி உத்தரவு
இலங்கையின் பிரதமராக மஹிந்த ராஜபக்ஷவும், அவரது அமைச்சர்களும் செயற்படுவதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்காலத் தடை உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் புதிய பிரதமராக நியமிக்கப்பட்ட மஹிந்த ராஜபக்ஷவும், புதிதாக நியமிக்கப்பட்ட அமைச்சர்களும் செயற்படுவதற்குத் தடை விதிக்கக் கோரி ஐக்கிய தேசிய முன்னணி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஜே.வி.பி. ஆகிய கட்சிகளைச் சேர்ந்த 122 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தாக்கல் செய்த மனு மீது இன்று மாலை மேன்முறையீட்டு நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
122 நாடாளுமன்ற உறுப்பினர்களும் இணைந்து தாக்கல் செய்த மனு மீது எதிர்வரும் 12ஆம், 13ஆம் திகதிகளில் விசாரணை நடத்தப்படும் என்றும், இந்த மனு மீது தீர்ப்பு அளிக்கப்படும் வரை, மஹிந்த ராஜபக்ஷ பிரதமராகவோ, அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் தத்தமது பணிகளையோ ஆற்ற முடியாது என்றும் மேன்முறையீட்டு நீதிமன்றம் கூறியுள்ளது.
தகுதியற்ற தனிநபர்கள் பிரதமர் பதவி மற்றும் அமைச்சர் பதவிகளை ஆக்கிரமித்தால் மீள முடியாத பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று நீதிபதிகள் தமது உத்தரவின்போது குறிப்பிட்டனர்.
அதேவேளை, மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் 49 பேர்களையும் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.