அரசியல் குழப்பம் நீடித்தால் பஞ்சம் தலைதூக்கும் – மருந்துக்கும் தட்டுப்பாடு ! அபாய சங்கு ஊதுகிறார் மைத்தரி!!
நாட்டில் அரசியல் குழப்பம் நீடித்து, அமைச்சுகள் இயங்கமுடியாதநிலை ஏற்பட்டால் உணவு மற்றும் மருந்து போன்றவற்றுக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்படலாம் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே, அரச துறையின் நடவடிக்கைகள் சீர்குலைய இடமளிக்காமல் உரிய முறையில் வழிநடத்துமாறு அரச அதிகாரிகளுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று பணிப்புரை விடுத்துள்ளார்.
அமைச்சின் செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள் மற்றும் பிரதம செயலாளர்கள் உள்ளிட்ட அரச நிறுவனங்களின் அதிகாரிகளுடன் இடம்பெற்ற சந்திப்பின்போதே ஜனாதிபதியால் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
“ நாட்டில் நிலவும் அரசியல் குழப்ப நிலை விரைவில் தீர்க்கப்படும். அதுவரை அரச கட்டமைப்பின் செயற்பாடுகள் மற்றும் பொதுமக்கள் சேவையை சக்திமயப்படுத்தி முன்னெடுத்துச் செல்வது அரச அதிகாரிகளினது கடமையாகும்.
எனவே, அனைத்து அரச அதிகாரிகளும் கட்சி பேதமின்றியும், நடுநிலையாகவும் தமது நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக நான் நம்புகின்றேன்” என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.