களுத்துறையில் கோர விபத்து! 6 பேர் சாவு; 52 பேர் படுகாயம்!!
களுத்துறை, வஸ்கடுவ பகுதியில் இரண்டு பஸ்கள் ஒன்றுடனொன்று மோதிய கோர விபத்தில் 6 பேர் பலியாகியுள்ளனர்.
இன்று அதிகாலை 5.15 மணியளவில் இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் 3 பெண்களும், 3 ஆண்களுமே உயிரிழந்துள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார்.
இந்த விபத்தில் 43 ஆண்களும், 8 பெண்களும், குழந்தை ஒன்றும் உள்ளிட்ட 52 பேர் படுகாயமடைந்துள்ளனர் எனவும் அவர் குறிப்பிட்டார்.
எல்பிட்டியிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பஸ்ஸொன்று, மற்றுமொரு வாகனத்தை முந்திச் செல்ல முற்பட்டபோது, எதிர்த் திசையில் வந்த தனியார் பஸ்ஸுடன் மோதியதாலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான தீவிர விசாரணைகளைப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.