தௌகீத் ஜமாத் அமைப்புக்கு காணி கொடுத்தார் கோட்டா! – ஐ.தே.க. பகிரங்கக் குற்றச்சாட்டு
பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச தௌஹீத் ஜமா அத் அமைப்பின் அலுவலகத்தை நிறுவக் காணி ஒன்றைப் பெற்றுக் கொடுத்துள்ளார் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பின துசார இந்துநில் குற்றஞ்சாட்டியுள்ளார்.
கொழும்பில் நேற்று நடத்திய ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:-
“நாட்டில் அடிப்படைவாதத்தைத் தோற்றுவிக்கக் கோட்டாபய ராஜபக்ச பல முயற்சிகளை மேற்கொண்டார். 241 ஏ, சிறி சத்தர்வ மாவத்தை, கொழும்பு என்ற முகவரியில் உள்ள காணியை தௌஹீத் ஜமா அத் அமைப்புக்குக் கோட்டாபய ராஜபக்ச பெற்றுக்கொடுத்துள்ளார். அந்த அமைப்பின் அலுவலகத்தை அமைப்பதற்கே அவர் இந்தக் காணியை வழங்கினார். இவ்வாறே அடிப்படைவாத அமைப்புக்களுக்கு அவர் உதவிகளை வழங்கியுள்ளார்.
இவ்வாறாள செயற்பாடுகளின் ஊடாக அவர் அமைதியாக இருக்கும் முஸ்லிம் இனத்தை இரண்டாக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டார். இவ்வாறு அனைத்துச் செயற்பாடுகளையும் கீழ்த்தரமான அரசியல் யுத்தியை கொண்டு அவர் மேற்கொண்டார்.
அடிப்படைவாதத்தை போதிக்கும் 200 பள்ளிகளைக் கட்டியதாகப் பஸில் ராஜபக்ச தெரிவித்த கருத்துக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளன. இந்தச் சம்பவத்துக்கும் கோட்டாபயவே உறுதுணையாக இருந்தார்” – என்று கூறியுள்ளார்.