தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட இராணுவத்துக்கு தண்ணீர்ப் போத்தல் வழங்கிய கல்முனை சிறுமி!
கல்முனையில் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளைத் தேடும் பணியில் ஈடுபட்ட இராணுவச் சிப்பாய் ஒருவருக்கு சிறுமி ஒருத்தி தண்ணீர்ப் போத்தல் வழங்கிய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளின் தற்கொலைக் குண்டுத் தாக்குதல் சம்பவங்களையடுத்து நாட்டின் பல பகுதிகளிலும் பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன், மறைந்திருக்கும் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளைத் தேடியும் தேடுதல் வேட்டை பாதுகாப்புத் தரப்பினரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இந்நிலையில், நேற்று கல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்முனைக்குடி கடற்கரை வீதியில் தொடங்கி, சாய்ந்தமருது வரையான பகுதிகளில் இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் இணைந்து தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இதன்போது, கல்முனைப் பகுதியில் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த இராணுவச் சிப்பாய் ஒருவருக்கு, சிறுமி ஒருத்தி தண்ணீர்ப் போத்தல் வழங்கினார். அதைப் பெற்றுக்கொண்ட அவர், குறித்த சிறுமியின் தலையை அன்புடன் வருடிக்கொண்டார். இதன்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.