ஐ.எஸ். தாக்குதலை காரணம்காட்டி தேர்தலை இழுத்தடிக்காதீர் – தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் வலியுறுத்து
” தொடர்குண்டு வெடிப்பு தாக்குதல்களை காரணம்காட்டி தேர்தல்கள் இழுத்தடிக்கப்படுமானால் அது ஜனநாயகத்தை படுகொலை செய்கின்றமைக்கு ஒப்பான செயலாகிவிடும். ” – என்று தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.
‘அனித்தா’ என்ற சிங்கள வார இதழ் ஆரம்பிக்கப்பட்டு ஓராண்டு பூர்த்தியை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்ட தேர்தல் ஆணைக்குழுவின் தலைவரிடம், ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
” நாட்டில் நடத்தப்பட்ட குண்டுவெடிப்பு தாக்குதலை காரணம்காட்டி தேர்தல் ஒத்திவைக்கப்படுமானால் அது ஜனநாயக விரோதச்செயலாகவே அமையும். பயங்கரவாதிகளால் ஜனநாயகத்துக்கு அச்சுறுத்தல். அதேபோல் தேர்தலை ஒத்திவைப்பதும் ஜனநாயகத்துக்கு அச்சுறுத்தல்.
குண்டுவெடிப்பு, படுகொலைகளுக்கு மத்தியிலும் இலங்கையில் இதற்கு முன்னர் தேர்தல்கள் நடத்தப்பட்டுள்ளன. எனவே, நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையை பயன்படுத்தி தேர்தலை இழுத்தடிக்கப்படுமானால் அது ஜனநாயகம்மீது நடத்தப்படுகின்ற படுகொலை தாக்குதலாகவே அமையும்.” என்றார்.