சாய்ந்தமருதுவில் ஐ.எஸ்.ஐஸ். தீவிரவாதிகள் குடும்பங்களுடன் சிக்கினர்! தாக்குதல் இடம்பெற்ற பகுதியில் 15 சடலங்கள் மீட்பு!!
ஐ.எஸ்.ஐஸ். தீவிரவாதிகளைத் தேடி பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் நேற்று மாலை நடத்திய சுற்றுவளைப்புத் தேடுதல் நடவடிக்கையின்போது துப்பாக்கிப் பிரயோக மோதல் மற்றும் வெடிப்புச் சம்பவங்கள் இடம்பெற்ற கல்முனை – சாய்ந்தமருது பிரதேசத்தில் இருந்து இதுவரை 15 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர இதனைத் தெரிவித்துள்ளார்.
6 ஆண்களும், 3 பெண்களும், 6 சிறார்களும் இவ்வாறு சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் இடம்பெற்ற பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்த படுகாயமடைந்த பெண் ஒருவரும் குழந்தை ஒன்றும் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர் எனவும் அவர் கூறியுள்ளார்.
இந்தச் சம்பவத்தில் பாதுகாப்புப் படையினருக்கு எவ்வித பாதிப்புக்களும் ஏற்படவில்லை எனத் தெரிவித்துள்ள அவர், பரவிவரும் பொய்யான தகவல்களை நம்ப வேண்டாம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, சடலங்கள் மீட்கப்பட்ட பகுதியிலிருந்து ஜிஹாத் தொடர்பான புத்தகங்கள், பெருமளவான பணம், வாகனங்கள் மற்றும் ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.