கவிபாடி மாணவர்களை மகிழ்வித்த மைத்திரி!
சிங்கள பாரம்பரிய கலைநயத்துடன் கவிபாடி பாடசாலை மாணவர்களை நேற்று ( 26) மகிழ்வித்தார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன.
“எழுச்சிபெறும் பொலன்னறுவை” அபிவிருத்தி திட்டத்தின்கீழ் நிர்மாணிக்கப்பட்ட அலுத்ஓய கனிஷ்ட பாடசாலையின் புதிய வகுப்பறை கட்டம், மாணவர்களிடம் கையளிக்கும் நிகழ்வு நேற்று முற்பகல் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டிருந்த ஜனாதிபதி, வகுப்பறைகளுக்குசென்று கல்வி நடவடிக்கைகளை கண்காணித்ததுடன், மாணவர்களின் குறைநிறைகளை கேட்டறிந்தார்.
ஜனாதிபதியை மகிழ்விப்பதற்காக சிங்கள பாரம்பரிய இசைக்கருவிகளுடன் ( ரபான், தப்பு) மாணவர்கள் கவிபாடினர்.
அவ்வேளையில் மாணவர்கள் மத்தியில்சென்று அமர்ந்த ஜனாதிபதி, மாணவர்களின் தாளத்திற்கேற்ப கைதட்டி, உடல் அசைத்து கவிபாடினார். இதனால், மாணவர்களும், ஆசிரியர்களும் பேரானந்தம் அடைந்தனர்.
அதன்பின்னர் கருத்து வெளியிட்ட ஜனாதிபதி
” பிள்ளைகள் கவிபாடினர் (விரிந்து -විරිදු). எனக்கு அது முடியும். சுகாதார அமைச்சராக இருந்தகாலத்தில் கவிபாடினேன் (விரிந்து -විරිදු). அப்போது சிலர் தொலைபேசிமூலம் என்னை தொடர்புகொண்டனர்.
இப்போது நீங்கள் அமைச்சர். எதற்காக பொருத்தமற்ற செயலில் ஈடுபடுகின்றீர்கள் என கேள்வி எழுப்பினர். ஆலோசனைகளையும் முன்வைத்தனர். ஆனால், விரிந்து , கவிபாடுதல் எல்லாம் எமது கலை, கலாசார அம்சங்கள். ஜனாதிபதியாக இருந்தால்கூட அவற்றை பின்பற்றுவதற்கு தயங்ககூடாது.” என்றார்.
வட மத்திய மாகாண ஆளுநர் சரத் ஏக்கநாயக்க உள்ளிட்ட அதிபர், ஆசிரியர்கள், பழைய மாணவர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.