கபட நாடகமாடி சர்வதேசத்தை ஏமாற்ற முயற்சிக்கிறதா அரசு? – நாடாளுமன்றில் கூட்டமைப்பு கேள்விக்கணை

“இலங்கை அரசு கபட நாடகமாடி சர்வதேசத்தை ஏமாற்ற முயற்சிக்கின்றதா அல்லது மக்களை ஏமாற்ற முயற்சிக்கின்றதா?”

– இவ்வாறு சபையில் நேற்றுக் கேள்வி எழுப்பினார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன்.

இந்த வருடத்துக்கான வரவு – செலவுத் திட்டத்தின் போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு மற்றும் துறைமுகங்கள், கப்பல் துறை அலுவல்கள் மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சு மீதான நிதி ஒதுக்கீடு தொடர்பான குழுநிலை விவாதம் நேற்று நடைபெற்றது.

இந்தக் குழுநிலை விவாதத்தில் பங்கேற்று உரையாற்றியபோதே நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் மேற்கண்டவாறு கேள்வி எழுப்பினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“ஜெனிவாவில் வெளிவிவகார அமைச்சர் ஐ.நா. தீர்மானத்தை ஏற்றுக்கொண்டு அதற்கு இணை அனுசரணை வழங்குவதாகத் தெரிவித்து அதில் கையொப்பமிட்டுள்ளார்.

எனினும், அரசின் முக்கிய பதவியிலுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஐ.நா. தீர்மானத்தின் பரிந்துரைகளில் ஒன்றான வெளிநாட்டு நீதிபதிகளை உள்ளடக்கிய கலப்பு நீதிமன்றப் பொறிமுறையை ஏற்றுக்கொள்ள முடியாது எனக் குறிப்பிடுகின்றார்.

இந்த விடயத்தில் நாம் அரசிடம் ஒரு கேள்வியை முன்வைக்க விரும்புகின்றோம். அரசு கபட நாடகமாடி சர்வதேசத்தை ஏமாற்ற முயற்சிக்கின்றா அல்லது மக்களை ஏமாற்ற முயற்சிக்கின்றதா?” – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *