இவ்வாரம் அமெரிக்கா பறக்கிறார் கோட்டா! குடியுரிமை சர்ச்சைக்கும் முடிவு கட்டப்படும்
பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலர் கோட்டாபய ராஜபக்ச இந்த வாரம் அமெரிக்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார் என்று அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தகவல் வெளியிடடுள்ளன.
கலிபோர்னியாவில் நடைபெறவுள்ள திருமண நிகழ்வு ஒன்றில் பங்கேற்கச் செல்லும் அவர், இந்தப் பயணத்தின் போது அமெரிக்க அதிகாரிகளைச் சந்திக்கவுள்ளார் என்றும் கூறப்படுகிறது.
ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காக, கோட்டாய ராஜபக்ச அமெரிக்க குடியுரிமையைத் துறக்கும் ஆவணங்களை கடந்த 6ஆம் திகதி அமெரிக்கத் தூதரகத்தில் கையளித்துள்ளார்.
இந்த விண்ணப்பம் தற்போது அமெரிக்க அதிகாரிகளின் பரிசீலனையில் இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் அமெரிக்கா செல்லும் அவர், அங்குள்ள அதிகாரிகளைச் சந்தித்து தமது குடியுரிமை துறப்பு விண்ணப்பம் குறித்து கலந்துரையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
குடியுரிமை துறப்பு தொடர்பான செயல்முறைகளை அடுத்த இரண்டு மாதங்களுக்குள் முடித்து விட முடியும் என்று கோட்டா அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. .