மார்ச் முதலாம் திகதி நள்ளிரவுடன் பாராளுமன்றம் கலையும்

மார்ச் 1 நள்ளிரவுடன் நாடாளுமன்றம் கலையும்
மக்கள் வழங்கியுள்ள ஆணையின் பிரகாரம் மார்ச் மாதம் 1ஆம் திகதி நள்ளிரவு பாராளுமன்றத்தை கலைப்பதற்கான வர்த்தமானியில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கட்டாயம் கையெழுத்திடுவார் என வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்தன தெரிவித்தார்.
புதிய அரசாங்கத்தின் வேலைத்திட்டங்களை கொண்டுசெல்ல பலமான பாராளுமன்றமொன்று அவசியமாகும். நாட்டை வெளிநாடுகளுக்கு கூறுபோட்ட அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்பி மக்களுக்கு வழங்கியிருக்கும் பொன்னான வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
பாதுக்கையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் கூறுகையில்,
மார்ச் மாதம் 1ஆம் திகதி நள்ளிரவுடன் சமகால பாராளுமன்றத்துக்கு நான்கரை வருடங்கள் நிறைவடைகின்றன. மக்கள் வழங்கிய ஆணையின் அடிப்படையில் அன்றைய தினம் நள்ளிரவே பாராளுமன்றத்தை கலைப்பதற்கான வர்த்தமானியில் ஜனாதிபதி கையெழுத்திடுவார்.
புதிய பாராளுமன்றத்தை அமைத்துக்கொள்வதற்கான வாய்ப்பு மீண்டும் மக்கள் கைகளிலேயே ஒப்படைக்கப்படும். சமகால பாராளுமன்றம் குழப்பங்கள் நிறைந்ததோர் பாராளுமன்றமாகும். நாட்டை கட்டியெழுப்ப சக்திவாய்ந்த பாராளுமன்றமொன்று அவசியமாகும்.
நாட்டையும் தேசிய பொருளாதாரத்தையும் அபிவிருத்தி பாதைக்கு கொண்டுசெல்வதற்கான அடித்தளத்தை கடந்த இரண்டரை மாதக் காலப்பகுதியில் இட்டுள்ளோம். படித்த இளைஞர், யுவதிகளுக்கு வாய்ப்பளிக்கும் மற்றும் வேலைவாய்ப்புக்களை உருவாக்கும் சக்திவாய்ந்த பயணமொன்றுக்கான பாதை உருவாக்கப்பட்டுள்ளது. புதிய அரசாங்கத்தின் இலக்குகளை அடைந்து கொள்ள பலமான பாராளுமன்றம் அவசியமாகும். நாட்டின் சுயாதீனம், வெளிநாடுகளுக்கு அடிப்பணியாத பொறிமுறையொன்று அவசியமாகும். நாட்டை வெளிநாடுகளுக்கு கூறுபோட்ட அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்ப மக்களுக்கு இந்த பொன்னான வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுத்துள்ளோம். மக்கள் வழங்கிய வாக்குறுதியின் எதிரொலிகள் சிறிகோத்தாவின் உள்ளே மோதல்களாக மாறியுள்ளன என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *