ஜெனிவாவில் எத்தனை தீர்மானங்கள் வந்தாலும் எதுவுமே செய்ய முடியாது! – மஹிந்த அணி இறுமாப்பு
“ஐ.நா. மனித உரிமைகள் சபையில் எத்தனை தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டாலும் எங்களை எதுவுமே செய்ய முடியாது.”
– இவ்வாறு மஹிந்த அணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.
இந்த மாத இறுதியில் ஆரம்பமாகவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் சபையின் கூட்டத் தொடரில், இலங்கை தொடர்பில் புதிய தீர்மானம் சமர்ப்பிக்கப்படவுள்ளது. இது தொடர்பில் கேள்வி எழுப்பியபோதே மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“இலங்கை தொடர்பில் ஐ.நா. மனித உரிமைகள் சபையில் தீர்மானம் நிறைவேற்றினாலும், எங்களை எதுவும் செய்ய முடியாது.
இலங்கைக்குள் ஏதாவது செய்ய வேண்டுமானால், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அனுமதி வழங்கவேண்டும். ஆனால், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இராணுவத்தினரைப் பாதுகாப்பேன் என்று உறுதியாகக் கூறியுள்ளார்.
ஜனாதிபதி பகிரங்கமாகவே போர்க்குற்ற விசாரணைக்கு அனுமதிக்கமாட்டேன் என்று தெரிவித்துள்ளமையால், அவரை மீறி சர்வதேச சமூகத்தால் இலங்கை விவகாரத்தில் தலையிட முடியாது.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இலங்கையை சர்வ்தேச அரங்கில் மீண்டும் காட்டிக் கொடுத்துள்ளார்” – என்றார்.