ஜெனிவா தீர்மானத்துக்கு மைத்திரியே பொறுப்பு! – பொன்சேகா சாடல்
“ஐ.நா. மனித உரிமைகள் சபையில் இலங்கை தொடர்பில் மீண்டும் தீர்மானம் கொண்டுவரப்படுவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே பொறுப்பு.”
– இவ்வாறு முன்னாள் இராணுவத் தளபதியும் ஐக்கிய தேசிய முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.
ஐ.நா. மனித உரிமைகள் சபையில் இலங்கை தொடர்பில் இந்த ஆண்டும் தீர்மானம் கொண்டு வரப்படவுள்ளது. இது தொடர்பில் சரத் பொன்சேகாவிடம் கேட்டபோதே மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“இலங்கை தொடர்பில் சர்வதேச சமூகத்தின் மத்தியில் ஏற்பட்டிருந்த தவறான அபிப்பிராயம் ஐக்கிய தேசிய முன்னணி ஆட்சிக்கு வந்ததும் இல்லாமல் செய்யப்பட்டிருந்தது.
கடந்த ஒக்டோபர் மாதம் 26ஆம் திகதி மைத்திரிபால சிறிசேனவால் ஏற்படுத்தப்பட்ட அரசியல் சதியைத் தொடர்ந்து சர்வதேச சமூகத்தில் மதிப்பிறக்கம் ஏற்பட்டது.
இதன் காரணமாகவே ஐ.நா. மனித உரிமைகள் சபையில் மீண்டும் தீர்மானம் நிறைவேற்றப்படவுள்ளது. இதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே பொறுப்பு.
போரின்போது இராணுவத்தை வழிநடத்திய தளபதி என்ற வகையில், போர்க்குற்ற விசாரணையை உள்நாட்டிலும் சரி வெளிநாட்டிலும் சரி எதிர்கொள்ளத் தயாராக இருக்கின்றேன்” – என்றார்.