தீர்ப்பு எதுவானாலும் ஏற்கத் தயாராகுங்கள்! – சு.க. உறுப்பினர்களுக்கு மைத்திரி அறிவுறுத்தல்
உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு எதுவாக இருந்தாலும் அனைத்து உறுப்பினர்களும் அதனை ஏற்று அடுத்தகட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்கவேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வலியுறுத்தியுள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் ரோஹாண லக்ஷ்மன் பியதாஸ நடத்திய ஊடக மாநாட்டில் இதனைத் தெரிவித்தார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தின்போதே ஜனாதிபதி இவ்வாறு அறிவுறுத்தினார் என சு.க. பொதுச் செயலர் குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன இணைந்து ஒரே கூட்டணியாகச் செயற்பட்டாலும் அதன் தலைமைத்துவத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே வகிப்பார். மஹிந்த ராஜபக்ஷ அனைத்து விடயங்களிலும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இணைந்து செயற்படுவார். இரு கட்சிகளும் இணைந்து எதிர்காலத்தில் புதிய கூட்டணியாக உருவெடுப்பது பற்றிப் பேசியுள்ளோம்.
நாடாளுமன்றக் கலைப்புக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களின் மீதான தீர்ப்பு எதுவாக இருந்தாலும் அதனை ஏற்றுக்கொண்டு அடுத்த கட்டத்துக்கு நகர ஜனாதிபதி சகலரையும் பணித்துள்ளார்” – என்றார்.