வடக்கு, கிழக்கின் அமைதியில் கை வைக்காதே! – பொலிஸார் படுகொலைக்கு எதிராக மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்
மட்டக்களப்பு, வவுணதீவுப் பகுதியில் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதைக் கண்டித்து மட்டக்களப்பில் கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
பொது அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளின் பங்களிப்புடன் மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்றலில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
டொலர்களுக்காக சமாதானத்தை அழிக்காதே, வடக்கு – கிழக்கின் அமைதியில் கை வைக்காதே, சமாதானத்தைக் குழப்புவர்களுக்கு எதிராக சட்டத்திதை நடைமுறைப்படுத்து, சமாதானத்தை நடைமுறைப்படுத்த அனைவரும் ஒன்றுகூடுங்கள் போன்ற வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாகைகளை ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் ஏந்தியிருந்தனர்.
இதன்போது பொலிஸாரின் படுகொலைக்கு எதிராக பல்வேறு கோசஷங்களும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்களினால் எழுப்பப்பட்டது.
இதுபோன்ற சம்பவங்கள் இனிமேல் நடைபெறா வண்ணம் உரிய தரப்பினர் செயற்பட வேண்டும் என்ற வேண்டுகோளும் விடுக்கப்பட்டது.
கொலையாளிகள் தங்களது தவறை உணர்ந்து சரணடைந்து இயல்பு நிலையை ஏற்படுத்த முன்வர வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டது.