சானியா மிர்சாவுடன் இணைந்து பணியாற்ற விரும்புவதாக பிரபல டென்னிஸ் வீரர் தெரிவிப்பு!
நோவக் ஜோகோவிச் 2014இல் புதுடெல்லியில் நடைபெற்ற சர்வதேச டென்னிஸ் பிரீமியர் லீக் போட்டிகளில் பங்குபற்றுவதற்காக மட்டுமே இந்தியாவிற்கு விஜயம் செய்திருந்தார். அதன் பின்னர் அவர் எவ்வித பயணங்களையும் மேற்கொண்டிருக்கவில்லை.
இந்நிலையில், அவுஸ்திரேலிய ஓபன் சாம்பியனில் விளையாடிவரும் நோவக் ஜோகோவிச், நேற்று வெள்ளிக்கிழமை நடந்த மூன்றாவது சுற்றில் அர்ஜென்டினாவின் தாமஸ் மார்ட்டினை நேர் செட்களில் தோற்கடித்து 4ஆவது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
அவுஸ்திரேலிய ஓபன் சாம்பியனில் வெற்றிபெற்றால் நோவக் ஜோகோவிச் வெற்றிக்கொள்ளும் 25ஆவது கிராண்ஸ்லாம் பட்டமாக இது அமையும்.
நேற்றை வெற்றியின் பின்னர் ஊடகங்களிடம் பேசிய நோவக் ஜோகோவிச், உலக புகழ்பெற்ற டென்னிஸ் போட்டியாளர்களில் ஒருவரான சானியா மிர்சாவுடன் டென்னிஸில் இணைந்து பணியாற்றுவதற்கான தனது விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
”இந்தியாவுடன் எனக்கு ஒரு பெரிய தொடர்பு இருக்கிறது. செர்பியா மற்றும் இந்தியாவின் வரலாற்றில் மிக நீண்ட காலத்திற்குப் பின்நோக்கிச் சென்றால், அங்கு நிறைய ஒற்றுமைகள் மற்றும் நிறைய தொடர்புகளைக் காணலாம். நான் இந்திய மக்களை நேசிக்கிறேன்.
அவர்கள் எப்பொழுதும் என்னிடம் மிகவும் அன்பாக இருந்திருக்கிறார்கள். உலகில் மிகவும் கனிவான, மிகவும் மென்மையான மற்றும் உண்மையான மனிதர்களாக அவர்கள் இருக்கின்றனர். விளையாட்டுகளை விரும்புகிறார்கள், கிரிக்கெட் விளையாட்டு மிகப்பெரியது.
ஆனால் டென்னிஸ், நான் புரிந்து கொண்டபடி, இந்தியா முழுவதும் பெரிதும் ரசிக்கப்படுகிறது. உலக புகழ்பெற்ற சானியா மிர்சாவுடன் எதிர்காலத்தில் இணைந்து பணியாற்ற ஆர்வமாக உள்ளேன்.” என்றார்.
கடந்த ஆண்டு அவுஸ்திரேலியன் ஓபனில் கலப்பு இரட்டையர் இறுதிப் போட்டியில் விளையாடியதே சானியா மிர்சாவின் இறுதி கிராண்ட்ஸ்லாம் போட்டியாக அமைந்தது.
இதேவேளை, பாகிஸ்தான் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சோய்ப் மாலிக் மற்றும் சானியா மிர்சா ஆகியோர் 2010ஆம் ஆண்டு காதல் திருமணத்தை செய்திருந்தனர். ஆனால், இருவருக்கும் விவாகரத்து ஏற்பட்டு இன்று சோய்ப் மாலிக் திருமண பந்தத்தில் இணைந்துக்கொடுள்ளார். அவர் பாகிஸ்தான் நடிகை சனா ஜாவித்தை திருமணம் முடித்துள்ளார்.