டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இந்திய அணியின் படுமோசமான தோல்வி பதிவானது!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி படுதோல்வியை சந்தித்தது.
அடிலெய்டில் நேற்று முன்தினம் தொடங்கிய டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் இன்னிங்சில், இந்திய அணி 244 ரன்களும், ஆஸ்திரேலியா அணி 191 ரன்களும் எடுத்தன. இதனால், 53 ரன்கள் முன்னிலையில் 2வது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி, வெறும் 36 ரன்களுக்கு 9 விக்கெட்டுக்களை இழந்ததுடன், ஷமியின் காயத்தால் இன்னிங்ஸ் முடிவடைந்தது. 20 ரன்கள் எடுப்பதற்குள்ளாகவே 6 விக்கெட்டுக்களை இழந்த நிலையில், எந்த வீரரும் நிலைத்து நின்று ஆடி ரன்களை சேர்க்கவில்லை. இந்தப் போட்டியில் இந்திய வீரர்கள் யாரும் இரட்டை இலக்கு ரன்களை எட்டவில்லை.
டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இந்திய அணி மோசமான ஆட்டமாக இது பதிவாகியுள்ளது. 1974ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட்டில் 42 ரன்களுக்கு சுருண்டிருந்தது. இந்த நிலையில், அதை விட குறைவாக இந்தப் போட்டியில் எடுத்துள்ளது.
2 நாட்கள் எஞ்சிய நிலையில், 90 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களறமிறங்கிய ஆஸ்திரேலிய அணி, நிதானமாக ஆடியது. அந்த அணியின் தொடக்க வீரர் வேட் (51 நாட் அவுட்), பர்ன்ஸ் (33) சிறப்பாக ஆட, 2 விக்கெட் இழப்பிற்கு 93 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. அஸ்வின் ஒரு விக்கெட்டை கைப்பற்றினார். இதன்மூலம், சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இந்திய அணி எதிர்கொண்ட பெருத்த தோல்வியாக இது கருதப்படுகிறது.