வார இறுதி நாட்களில் விஷேட சுற்றிவளைப்பு நடவடிக்கை!
வார இறுதி நாட்களில் விசேட சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்படவிருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரான பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
மதுபோதை மற்றும் பாதுகாப்பற்ற முறையில் வாகனம் ஓட்டும் சாரதிகளை கைது செய்வதற்கு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
கொவிட்-19 லைரஸ் தொற்று காரணமாக விதிக்கப்பட்ட போக்குவரத்து கட்டுப்பாடுகளினால் கடந்த காலங்களில், விபத்துக்களால் நிகழும் உயிரிழப்புக்களின் எண்ணிக்கை குறைவடைந்திருந்தது.
எனினும், மீண்டும் உயிரிழப்புக்கள் அதிகரித்து வருவதாக தரவுகள் குறிப்பிடுகின்றன.
அத்துடன் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் சிக்கி பத்து பேர் உயிரிழந்திருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
நாட்டில் அதிகளவான வாகன விபத்துகள் டிசெம்பர் மாதம் 20 ஆம் திகதியிலிருந்து ஜனவரி மாதம் 5ஆம் திகதி வரையான காலப்பகுதியிலும், ஏப்ரல் மாதம் 10ஆம் திகதியிலிருந்து 20ஆம் திகதி வரையான காலப்பகுதியிலும் நிகழ்வதாக அஜித் ரோஹண தெரிவித்தார்.
மேலும் , நேற்று காலை 6 மணியுடன் நிறைவடைந்த 24 மணிநேரங்களில் முகக்கவசம் அணியாத மற்றும் சமூக இடைவெளியைப் பேணாத 37 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.