ஜனாதிபதி – அரசு முரண்பாட்டால் மோசமான நிலையில் இலங்கை! – ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் கவலை

“இலங்கையில் ஜனாதிபதிக்கும் அரசுக்கும் இடையில் ஒற்றுமையான அணுகுமுறை இல்லாதது நாட்டின் பாதுகாப்பு மற்றும் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் மோசமான தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றது.”

– இவ்வாறு கவலை வெளியிட்டுள்ளார் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்சலெட்.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 41ஆவது அமர்வு நேற்று ஜெனிவாவில் ஆரம்பமானது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் இலங்கை தொடர்பாக தனது கவலையை வெளியிட்டார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

“முக்கியமாக, ஜனாதிபதிக்கும் அரசுக்கும் இடையில் ஒற்றுமையான அணுகுமுறை இல்லாதது நாட்டின் பாதுகாப்பு மற்றும் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் மோசமான தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றது .

முஸ்லிம்கள் மீதான தாக்குதல்கள் மற்றும் சில மதத் தலைவர்களின் வன்முறையைத் தூண்டும் விதமான சமீபத்திய அறிக்கைகள் கவலையை ஏற்படுத்துகின்றன. பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் அமுலில் இருக்கும் நிலையில் அவசரகாலச் சட்டத்தை நீக்குவது தொடர்பாக அரசு கவனம் செலுத்தவேண்டும்.

அத்தோடு அரசியல் தலைவர்கள், மத மற்றும் சமூகத் தலைவர்கள் அனைவரும் இணைந்து வன்முறைகள் மற்றும் இன ரீதியாக இருக்கும் பாகுபாடுகளைக் களைவதற்கான வழிமுறைகளை காண்பதற்கு முன்னுரிமை அளிக்கவேண்டும்” – என்றார்.

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் செயற்படுகளை பாராட்டியுள்ள அவர், தொடர்ந்தும் தன்னுடைய ஆதரவு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் செயற்பாடுகளுக்கு இருக்கும் எனவும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *