வடக்கில் அரசியல்வாதிகளால் போதைப்பொருட்கள் கடத்தல்! – விஜயகலா பரபரப்பு தகவல்

“போரை முடிவுக்குக் கொண்டு வந்த அரசு அபிவிருத்தி என்ற பெயரில் வடக்கில் போதைப்பொருட்களை விதைத்தது. வடக்கில் அரசியல்வாதிகள் ஊடாகவே அதிக அளவில் போதைப்பொருட்கள் கடத்தப்படுகின்றன.”

– இவ்வாறு கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்லரன் தெரிவித்தார்.

மன்னார் – அடம்பன் மகா வித்தியாலயத்தில் நடைபெற்ற இல்ல விளையாட்டுப் போட்டியில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“நெல்லை அறுவடை செய்ய விதைப்பது போல் வடக்கில் போதைப்பொருட்களை விதைக்கின்றார்கள். இதற்குக் காரணம் அரசியல்வாதிகள்.

தங்களுடைய சுய இலாபத்திற்காக தங்களுடைய வாகனங்களிலே போதைப்பொருட்களைக் கொண்டு செல்கின்றார்கள்.

உண்மையிலேயே அரசியல்வாதிகளுடைய வாகனங்கள் பெரிதும் சோதிக்கப்படுவதில்லை. நாடாளுமன்ற உறுப்பினர், அமைச்சர் என்று குறிப்பிடும்போது பொலிஸ் அதிகாரிகள் வாகனங்களை சோதனையிடுவதில்லை.

அந்த வாகனத்தில் என்ன போகின்றது என்பது தெரியாது. இப்படித்தான் கடந்த காலங்களில் போதைப்பொருட்கள் அதிகம் எமது பிரதேசங்களுக்குள் வந்துள்ளது.

இதைப் பல இடங்களில் கண்டுபிடித்துள்ளோம். நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம். இதை நிச்சயமாக நிறுத்த வேண்டும்.

இதனால்தான் சிறுவர் துஷ்பிரயோகம், பாலியல் வல்லுறவு போன்ற பிரச்சினைகள் அதிகரித்துக் காணப்படுகின்றன” – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *