நாடாளுமன்றம் கலைப்பு: மனுக்களை விசாரிக்க 7 நீதியரசர்களைக் கொண்ட குழாம்!
நாடாளுமன்றத்தைக் கலைத்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வர்த்தமானி அறிவிப்புக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுக்களை விசாரிப்பதற்கு, தமது தலைமையிலான ஏழு நீதியரசர்களைக் கொண்ட குழாமை பிரதம நீதியரசர், நளின் பெரேரா நியமித்துள்ளார்.
நவம்பர் 9 ஆம் திகதி, நாடாளுமன்றத்தைக் கலைக்கும் வகையில், ஜனாதிபதியால், வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவிப்புக்கு எதிராக 13 அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இதுதொடர்பாக, இடையீட்டு மனுக்களை தாக்கல் செய்த ஐந்து பேர் இந்த அடிப்படை உரிமை மனுக்களை, உச்சநீதிமன்றத்தின் முழுமையான அமர்வு ஒன்றே விசாரிக்க வேண்டும் என்று கோரியிருந்தனர்.
அரசாங்கத்தின் சார்பில், சட்டமா அதிபரும், முழு அளவிலான விசாரணை அமர்வு ஒன்றே இந்த விசாரணையை நடத்த வேண்டும் என்று கோரியிருந்தார்.
இதன் அடிப்படையிலேயே, தனது தலைமையிலான ஏழு நீதியரசர்களைக் கொண்ட குழாமே இந்த மனுக்கள் மீதான விசாரணையை நடத்தும் என்று தலைமை நீதியரசர், நளின் பெரேரா அறிவித்துள்ளார்.
இந்த விசாரணைகள் வரும் டிசெம்பர் 4ஆம் திகதி தொடக்கம் 6ஆம் திகதி வரை இடம்பெறும் என்றும், தீர்ப்பு 7ஆம் திகதி வழங்கப்படும் என்றும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.