கொரோனாவை அடுத்து 14 நாடுகளில் வேகமாக பரவியுள்ள குரங்கம்மை!

இஸ்ரேல் மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளிலும் குரங்கம்மை நோய் பரவல் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதனையடுத்து இந்த நோய் தற்போது 14 நாடுகளில் பரவியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. ஐரோப்பா, அமெரிக்கா, கனடா மற்றும் அவுஸ்திரேலியாவில் இதுவரை 80 க்கும் மேற்பட்ட நோய் தொற்றாளர்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளனர்.

மத்திய மற்றும் மேற்கு ஆப்பிரிக்காவின் தொலைதூரப் பகுதிகளில் இந்த நோய் பொதுவானது. இந்த குரங்கம்மை மக்களிடையே எளிதில் பரவுவதில்லை.

அத்துடன் உயிர் ஆபத்தும் குறைவாக இருப்பதாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் நோயின் திடீர் பரவல் வெடிப்பு விஞ்ஞானிகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

இங்கிலாந்தின் தேசிய சுகாதார சேவையின் படி, இந்த நோய் தொற்றியவர்கள் சில வாரங்களில் குணமடைவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை உலக சுகாதார அமைப்பு, சம்பந்தப்பட்ட நாடுகளின் பெயரைக் குறிப்பிடாமல் – மேலும் தொற்றுநோய்கள் உறுதி செய்யப்படலாம் என்று எச்சரித்துள்ளது.

இந்த நோயை தடுக்க அமெரிக்க முயன்று வருகிறது என்று அந்த நாட்டின் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இந்த தொற்று முதன்முதலில் இங்கிலாந்தில் கண்டறியப்பட்ட பின்னர், ஐரோப்பா முழுவதும் பரவியது. ஸ்பெயின், போர்த்துக்கல், ஜெர்மனி, பெல்ஜியம், பிரான்ஸ், நெதர்லாந்து, இத்தாலி மற்றும் ஸ்வீடன் ஆகிய நாடுகளில் உள்ள பொது சுகாதார நிறுவனங்கள் இந்த நோயை உறுதிப்படுத்தியுள்ளன.

குரங்கம்மைக்கு குறிப்பிட்ட தடுப்பூசி எதுவும் இல்லை என்றாலும், பல நாடுகள் பெரியம்மை தடுப்பூசிகளை சேமித்து வைத்திருப்பதாகக் கூறியுள்ளன,

இந்த இரண்டு நோய்களுக்குமான வைரஸ்கள் ஒரே மாதியாக இருப்பதால், தொற்றுநோயைத் தடுப்பதில் சுமார் 85% பயனுள்ளதாக இருக்கும் என்று மருத்துவத்துறை தெரிவிக்கிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *