குளியாப்பிட்டியில் பதற்றம்! – முஸ்லிம்களின் வர்த்தக நிலையங்கள், பள்ளிவாசல்கள் மீது தாக்குதல்
குளியாப்பிட்டிப் பகுதியில் ஏற்பட்ட பதற்ற நிலையைத் தொடர்ந்து, மேலும் சில பொலிஸ் பிரிவுகளில் ஊரடங்குச் சட்டம் நள்ளிரவுக்குப் பின்னர் நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்டது.
குளியாப்பிட்டி, பிங்கிரிய, தும்மலசூரிய ஆகிய பொலிஸ் பிரிவுகளிலேயே ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது என பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.
இன்று காலை 6 மணி வரை இந்த ஊரடங்குச் சட்டம் நடைமுறையில் இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
குளியாப்பிட்டிப் பகுதியில் உள்ள முஸ்லிம்களுக்குச் சொந்தமான வர்த்தக நிலையங்கள் மற்றும் பள்ளிவாசல்கள் மீது நேற்று மாலை தாக்குதல்கள் நடத்தப்பட்டதை அடுத்தே, இந்தப் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.
இந்தத் தாக்குதல்களுடன் தொடர்புடையவர்கள் கைதுசெய்யப்பட்டு குளியாப்பிட்டிப் பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டிருந்தனர். அவர்களை விடுவிக்கக் கோரி, நேற்றிரவு பெருமளவிலானோர் பொலிஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர். இதனால் அங்கு பதற்ற நிலை ஏற்பட்டது.
இதையடுத்தே, இன்று காலை 6 மணிவரை ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. அதேவேளை, குளியாப்பிட்டிப் பொலிஸ் நிலையத்துக்கு இராணுவப் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.