ஐ.எஸ்.ஐ.எஸ். கொலைவெறித் தாக்குதல்: விசாரணை அறிக்கை நாடாளுமன்றத்துக்கு!
இலங்கையில் உயிர்த்த ஞாயிறன்று (21.04.2019) ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைக் குண்டுத் தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக நியமிக்கப்பட்ட விசேட விசாரணைக் குழுவின் அறிக்கையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி செயலாளரிடம் கடிதம் மூலம் கோரவுள்ளதாக சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்தார்.
நாட்டின் பாதுகாப்பு தொடர்பில் நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற விவாதத்தில், “உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணை நடத்துவதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் மூவரடங்கிய விசேட விசாரணைக்குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது. அந்தக் குழுவின் அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளது என ஊடகங்கள் மூலம் அறியக்கிடைத்தது. எனவே, அந்த அறிக்கையை சபையில் சமர்ப்பிப்பதற்கு நடவடிக்கை எடுங்கள்” என்று ஐக்கிய தேசியக் கட்சியின் எம்.பியான ஆசுமாரசிங்கவால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்குப் பதிலளிக்கையிலேயே சபாநாயகர் மேற்கண்டவாறு கூறினார்.