கொரோனா வைரஸ் சமூகத்தில் பரவவில்லை என்பதால் கட்டுப்பாடுகளை இலகுபடுத்தத் தீர்மானம்!
கொரோனா வைரஸ் தொற்று சமூகத்தில் பரவும் சந்தர்ப்பங்கள் இல்லை என்பதை சுகாதார முறைகள் மூலம் உறுதிப்படுத்தக்கூடிய நிலையில் இருப்பதால் இந்த வாரம் முதல் கட்டுப்பாடுகளை இலகுபடுத்துவதற்குத் தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
கனடா மற்றும் ஜமைக்கா ஆகிய நாடுகளின் பிரதமர்களுடன் நேற்றைய தினம் இடம்பெற்ற காணொளி மூலமான விசேட கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்
அத்துடன் கொரோனா அச்சுறுத்தல் காணப்படும் வேளையில் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் எதுவாக இருந்தாலும் மக்களின் பாதுகாப்பு எப்பொழுதும் உறுதி செய்யப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, உலகளாவிய ரீதியில் வர்த்தகம், சுற்றுலாத்துறை, முதலீடு மற்றும் வேலைவாய்ப்பு ஆகியவை குறைவடைந்துள்ளதாகவும் இதன்போது ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், இந்த நிலைமையானது பொருளாதாரம் மற்றும் வணிகம் ஆகியவற்றை சீர்குலைத்துள்ளதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன் காரணமாக நிதி பற்றாக்குறை ஏற்பட்டுள்ள நாடுகளில் பொருளாதாரத்தை மேம்படுத்துவதை விடவும் கடன் தொகை அதிகரித்துள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, கடந்த இரண்டு மாதங்களாக நாட்டில் விவசாயம், உணவுப் பாதுகாப்பு, சுற்றுச் சூழல் பாதுகாப்பு, டிஜிட்டல் பொருளாதாரம் போன்ற துறைகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டுள்ளார்
இந்த நிலையில், கொரோனா வைரஸ் தொற்றுப் பரவல் சமூக மயமாக்கப்படவில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து இந்த வாரம் முதல் கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்கு இலங்கை தீர்மானித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, குறித்த காணொளி ஊடான கலந்துரையாடலில் கல்வி, சுகாதாரம், பெண்கள் மற்றும் சிறுவர்களின் பாதுகாப்பு, புதிய ஏற்றுமதித் துறைகள், உணவு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு உள்ளிட்ட பல விடயங்கள் குறுத்து கவனம் செலுத்தப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது