இறுதித் தருணத்தை நாம் தவறவிடோம்! புதிய அரசமைப்பை நிறைவேற்றுவோம்!! – ராஜித தெரிவிப்பு
“தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணும் இறுதிச் சந்தர்ப்பத்தை நாம் தக்க முறையில் – அனைவருக்கும் பயனுள்ள வகையில் பயன்படுத்துவோம். புதிய அரசமைப்பை நிறைவேற்றியே தீருவோம். பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் இந்த நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளார்.”
– இவ்வாறு சுகாதாரம், போசாக்கு மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
பிளவுபடாத நாட்டுக்குள் புதிய அரசமைப்பை உருவாக்குவதற்கு கிடைத்துள்ள இறுதிச் சந்தர்ப்பத்தை சிங்கள மக்கள் தவறவிடக் கூடாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ள கருத்துத் தொடர்பில் கேட்டபோதே அமைச்சர் ராஜித மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“புதிய அரசமைப்பு தொடர்பில் இரா.சம்பந்தனும் எம்.ஏ.சுமந்திரனும் வெளியிடும் கருத்துக்கள் இன ஒற்றுமைக்கு வழிவகுப்பவையாக உள்ளன. அவர்களின் கருத்துக்களை மனதார வரவேற்கின்றோம்.
பிளவுபடாத நாட்டுக்குள் மூவின மக்களும் ஏற்கும் அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வை இந்த அரசு வழங்கியே தீரும்.
எதிர்வரும் பெப்ரவரி மாதம் 4ஆம் திகதிக்கு முன் புதிய அரசமைப்புக்கான வரைவு நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்.
நாட்டின் மீதும் மக்கள் மீதும் அக்கறையுள்ள அனைவரும் புதிய அரசமைப்புக்கு ஆதரவு வழங்குவார்கள்.
நாட்டின் தலைவிதியைத் தீர்மானிக்கும் அரசமைப்பு விவகாரம் தொடர்பில் மஹிந்த அணியினர் கருத்துக்களை வெளியிடும்போது மிகவும் அவதானமாக இருக்கவேண்டும்” – என்றார்.