ஊடகவியலாளர் தயாபரன் படுகாயங்களுடன் வைத்தியசாலையில்! – தாக்குதலா? விபத்தா?

யாழ்ப்பாணத்தின் மூத்த ஊடகவியலாளர் இரட்ணம் தயாபரன் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

மோட்டார் சைக்கிளில் சென்ற அவரைப் பின்னால் மற்றுமொரு மோட்டார் சைக்கில் வந்த நபர் ஒருவர் மோதித் தள்ளிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டார் என்று அச்சுவேலிப் பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ். ஊடக அமையத்தில் இன்று வெள்ளிக்கிழமை நண்கல் புலம்பெயர் சமூகத்துடன் நடைபெறவிருந்த கலந்துரையாடலில் பங்குகொள்வதற்காக உடுப்பிட்டிப் பகுதியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்து கொண்டிருந்தபோதே அவர் விபத்தில் சிக்கியுள்ளார்.

குறித்த சம்பவம் சாதாரண விபத்துச் சம்பவமா? அல்லது திட்டமிட்ட தாக்குதல் சம்பவமா? என்பது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

விபத்துச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவது:-

குறித்த ஊடகவியலாளர் உடுப்பிட்டியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி மோட்டார் சைக்கிலில் வந்து கொண்டிருந்தபோது புத்தூர் சோமஸ்கந்தா பாடசாலைக்கு அண்மையில் பின்னால் வந்த மோட்டார் சைக்கில் ஊடகவியலாளரின் மோட்டார் சைக்கிளை மோதித்தள்ளியுள்ளது.

விபத்துக்குள்ளாகி ஊடகவியலாளர் வீழ்ந்த போதிலும், அவரை மோதிய நபர் தனது மோட்டார் சைக்கிளை அங்கு நிறுத்தாமல், சம்பவ இடத்தில் இருந்து தப்பியோடியுள்ளார்.

படுகாயமடைந்த ஊடகவியலாளர் அங்கிருந்தவர்களால் மீட்கப்பட்டு, அச்சுவேலிப் பிரதேச வைத்தியசாலைக்கு கூட்டிச் செல்லப்பட்டார். பின்னர் அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

(யாழ். தீபன்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *