நல்லாட்சியில் பல குறைப்பாடுகள் – அமைச்சர் மனோ சுட்டிக்காட்டு!
ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான இந்த ஆட்சியில் பல குறைபாடுகள் உள்ளன என்று அதன் பங்காளிக்கட்சியான தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரான அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தனது முகநூலில் இன்று ( 13) பதிவொன்றையும் மனோ கணேசன் இட்டுள்ளார்.அப்பதிவு வருமாறு,
” அந்த ஆட்சியைவிட , ஒப்பீட்டளவில் இந்த ஆட்சி சிறந்தது. இது என் கணிப்பு. ஆனால் இந்த ஆட்சியை “மிக சிறந்தது” என நான் ஒருபோதும் கூறுவதில்லை. பல குறைபாடுகள் உள்ளன. நானே இந்த குறைப்பாடுகளை பகிரங்கமாக சுட்டிக்காட்டுகின்றேனே!
எனினும் இந்த குறைபாடுகளை காரணமாக காட்டி பின்னோக்கி சென்று பழைய காட்டாட்சியை மீள கொண்டு வர முடியாது. அதைவிட இந்த ஆட்சி சிறந்தது எனக்கூறும் நாம், நிதானமாக இதைவிட சிறந்த ஆட்சி ஒன்றிற்காக முன்னோக்கிதான் நகர வேண்டும்.
ஆனால் இன்று அத்தகைய ஒரு தேசிய அரசியல் கூட்டணி கண்ணுக்கு எட்டிய தூரத்தில் இல்லை. இதுதான் யதார்த்தம்.
அரசியல் பொது பரப்பில் “எடுத்தேன், கவிழ்த்தேன்'” என முடிவெடுக்க கூடாது, முடியாது. நிதானம் அவசியம்.
இதைவிட மகிந்தவின் பழைய ஆட்சியே சிறந்தது என நினைப்பவர்கள், அந்த ஆட்சியை மீண்டும் கொண்டு வரும் முயற்சிக்கு தாராளமாக ஆதரவளிக்கலாம். அது அவர்களது ஜனநாயக உரிமை. இந்த உரிமையையும் எங்கள் ஆட்சியில் நாம் உறுதிபடுத்தியுள்ளோம்.” என்றுள்ளது.