சு.கவின் 12 எம்.பிக்கள் ரணில் அரசுக்கு ஆதரவு! – பியசேன கமகே தகவல்
“ஜனாதிபதியுடன் உள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பிரபல 12 எம்.பி.க்கள் அடுத்த இரு வாரங்களில் ரணில் அரசுக்கு ஆதரவு தெரிவித்து எங்களுடன் இணைந்துகொள்ளவுள்ளனர்.”
– இவ்வாறு ரணில் அரசுக்கு ஆதரவு வழங்கிய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உப தலைவரும் காலி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பியசேன கமகே தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
“ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குக் கிடைக்க வேண்டிய எதிர்க்கட்சித் தலைமையைப் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்ததன் மூலம் ஜனாதிபதி மைத்திரிபால தனது கட்சியை மீண்டும் ஒருமுறை அழிவை நோக்கி இட்டுச் சென்றுள்ளார்.
அரசுடன் இணைந்து கொள்ளும் சு.க. எம்.பி.க்களுக்கு அமைச்சுப் பதவிகளை வழங்குவதில்லை எனவும், ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப் போவதாகவும் கூறும் ஜனாதிபதியின் மிரட்டலுக்கு நாம் அஞ்சமாட்டோம்.
மைத்திரிபால சிறிசேனவுக்கும் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் எதிராகவே ஒழுக்காற்று நடவடிக்கை முதலில் எடுக்கப்பட வேண்டும்” – என்றார்.