ஆளுங்கட்சி ஆசனம் நிலையானதல்ல – ரணிலுக்கு மஹிந்த முன்னெச்சரிக்கை!
சூழ்ச்சிமூலம் ஆட்சிக்கவிழ்க்கப்படவில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
‘‘ சூழ்ச்சிமூலமே ஆட்சிகவிழ்க்கப்பட்டது என பிரதமர் உள்ளிட்ட ஆளுங்கட்சி உறுப்பினர்கள் சபையில் குற்றஞ்சாட்டினர். ஆனால், சூழ்ச்சி மூலம் ஆட்சியைக் கவிழ்க்கவில்லை. எதிரணியில் நாம் அமர்ந்திருக்கையில், ஆளுங்கட்சி ஆசனம் நிலையானது என்று மட்டும் நினைத்துக்கொண்டிருக்கவேண்டாம்.
ஏனெனில் எந்த நேரத்திலும் எந்த சந்தர்ப்பத்திலும் – அரசின் மக்கள் விரோத செயற்பாடுகளுக்கு எதிராக எதிர்க்கட்சி நடவடிக்கை எடுக்கும். மக்களும் கிளர்ந்தெழுவார்கள்.
நெருக்கடிக்கு மத்தியிலேயே ஆட்சியைப் பொறுப்பேற்றோம். இதன்காரணமாகவே மக்களுக்கு உடனடி நிவாரணங்களை வழங்கினோம். இன்று பிரதமர் எரிபொருள் விலையைக் குறைத்தார். இன்று செய்வதை அன்று செய்திருந்தால் என்ன? ஆனால், கடந்தகாலங்களில் விலைகுறைப்பு நடக்கவில்லை.” என்றார்.