ரணில் அரசின் இடைக்காலக் கணக்கறிக்கை நாடாளுமன்றில் இன்று மாலை நிறைவேற்றம்!
2019ஆம் ஆண்டு முதல் காலாண்டுக்கான செலவீனங்களுக்காக நிதி அமைச்சர் மங்கள சமரவீரவால் நாடாளுமன்றத்தில் இன்று காலை சமர்ப்பிக்கப்பட்ட சற்றுமுன்னர் 96 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.
1,765 பில்லியன் ரூபாவுக்கான இடைக்காலக் கணக்கறிக்கை மீது இலத்திரனியல் முறைமையில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
இலத்திரனியல் முறைமையின் கீழ் வாக்களிக்க முடியாத சிலர் பெயர் குறிப்பிடப்பட்டு வாக்களிப்பில் கலந்துகொண்டனர்.
இந்தக் கணக்கறிக்கையின் மீது காலை முதல் மாலை வரை விவாதம் நடைபெற்ற பின்னர் வாக்கெடுப்பு நடத்தப்படவேண்டுமென ஜே.வி.பி. கோரியது.
அதன்படி நடந்த வாக்கெடுப்பில் ஆதரவாக 102 வாக்குகளும், எதிராக 6 வாக்குகளும் கிடைத்தன.
வாக்கெடுப்பின்போது சபையில் அமர்ந்திருந்த ஐக்கிய தேசிய முன்னணி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகியவற்றின் 102 உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்தனர். ஜே.வி.பியின் 6 உறுப்பினர்களும் எதிராக வாக்களித்தனர்.
மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அணியினர் வாக்கெடுப்பின்போது சபையில் பிரசன்னமாகவில்லை. எனினும், இடைக்கால கணக்கறிக்கை மீதான விவாதத்தின்போது, நாட்டின் நலன் கருதி இடைக்காலக் கணக்கறிக்கைக்கு தாம் ஆதரவளிப்பதாகத் தெரிவித்திருந்தனர்.