‘நீதி’ கிடைக்கப் பாடுபட்ட அனைவருக்கும் நன்றிகள்! – நாட்டைக் கட்டியெழுப்புவோம் என ரணில் சபதம்
“நாடாளுமன்றம், நீதிமன்றம் என்பன நாட்டில் ஜனநாயகத்தை நிலைநாட்ட நடுநிலையுடன் செயற்பட்டன. இது மக்களுக்குக் கிடைத்த நீதி. இதற்காக உழைத்த அனைவருக்கும் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.”
– இவ்வாறு மீண்டும் பிரதமராக இன்று பதவியேற்ற ரணில் விக்கிரமசிங்க, அலரி மாளிகையில் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையின்போது தெரிவித்தார்.
“அரசியல் நெருக்கடி காரணமாக துரதிர்ஷ்டவசமாக சில வாரங்கள் நாடு மோசமடைந்துள்ளது. நாட்டின் இயல்பு நிலையை உடனடியாகச் சரி செய்வோம். இடைநிறுத்தப்பட்ட பொருளாதார அபிவிருத்தித் திட்டங்களை மீண்டும் முன்னெடுப்போம். நாட்டைக் கட்டியெழுப்புவோம்” எனவும் அவர் சபதமிட்டார்.
“முன்னைய ஆட்சிகளின்போது, நாடு எதிர்நோக்கிய பொருளாதார நிலையைச் சரி செய்வற்கு கடந்த மூன்று வருடங்களாக மக்கள் பல கஷ்டங்களை எதிர்கொண்டனர். அதன் பலனை மக்களுக்குப் பெற்றுக்கொடுப்பதற்கான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டபோதே இந்தப் பிரச்சினை உருவானது. எனினும், இதைவிட சிறந்த பொருளாதார நிலையை மக்களுக்குப் பெற்றுக்கொடுப்போம்” எனவும் அவர் உறுதியளித்தார்.