‘அந்த ஏழு நாட்கள்’ – காலக்கெடு நள்ளிரவோடு முடிவு! தீர்வு எங்கே?
நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிக்கு இன்னும் ஏழு நாட்களுக்குள் தீர்வு காணப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் விடுக்கப்பட்ட காலக்கெடு இன்று நள்ளிரவுடன் நிறைவடைகின்றது. எனினும், அரசியல் நெருக்கடி முடிவுக்கு வருவதற்குரிய அறிகுறிகள் எதுவும் பிரகாசமாக தென்படவில்லை என சுட்டிக்காட்டப்படுகின்றது.
ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் விசேட மாநாடு கடந்த 4 ஆம் திகதி கொழும்பில் நடைபெற்றது. இம்மாநாட்டில் சிறப்புரையாற்றிய சு.க. தலைவரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன,
” நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிக்கு இன்னும் ஏழு நாட்களுக்குள் ( 4-11) தீர்வுகாணப்படும்” என்ற அறிவிப்பை விடுத்தார். இதுகுறித்தான செய்தியே ஊடகங்களில் பிரதான இடத்தைப்பிடித்தது. மறுநாள்காலை பத்திரிகைகளும் அதை தலைப்புச்செய்திகளாக பிரசுரித்திருந்தன.
சமூகவலைத்தளங்களிலும் ஜனாதிபதியின் ‘காலக்கெடு’ அறிவிப்பு பலகோணங்களில் கருத்தாடல்களை உருவாக்கியது. எனவே, இன்று நள்ளிரவுடன் அந்த காலக்கெடு நிறைவுக்குவருகின்றது. ஆனால், அரசியல் நெருக்கடிக்கு தீர்வு காணப்பட்டதாக தெரியவில்லை.
அதேவேளை, உயர்நீதிமன்ற தீர்ப்பு வெளியான பின்னரே நெருக்கடி தீரும் என அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டுகின்றனர். எனவே, தீர்ப்பை விரைவில் வழங்குமாறு பிரதம நீதியரசரிடம், ஜனாதிபதி கோரிக்கை விடுத்துள்ளார்.