கதவு திறந்தே இருக்கிறது – சந்திரிக்கா எந்தநேரத்திலும் வரலாம்! சு.க. அழைப்பு!!
ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியிலிருந்து தன்னை ஓரங்கட்டுவதற்கு முயற்சிக்கப்படுகின்றது என அக்கட்சியின் முன்னாள் தலைவரான சந்திரிக்கா அம்மையாரால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டை சுதந்திரக்கட்சி இன்று நிராகரித்தது.
” சந்திரிக்காவை எமது கட்சி ஒருபோதும் கைவிடாது. அவரே கட்சியிலிருந்து விலகி நிற்பதுபோல் அறிவிப்புகளை விடுத்துவருகின்றார்” என்று சுதந்திரக்கட்சியின் பொதுச்செயலாளர் ரோஹண லக்ஷ்மன் பியதாஸ தெரிவித்தார்.
ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் விசேட மாநாடு கடந்த 4 ஆம் திகதி கட்சித் தலைவரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கொழும்பில் நடைபெற்றது. இம்மாநாட்டை சந்திரிக்கா அம்மையார் புறக்கணித்திருந்தார். தனக்கு அழைப்பு விடுக்கப்படாததன் காரணமாகவே இம்முடிவை எடுத்ததாக சுட்டிக்காட்டி கட்சியின் பொதுச்செயலாளருக்கு சந்திரிக்கா அம்மையார் கடிதமொன்றையும் எழுதியிருந்தார்.
இவ்விவகாரம் தொடர்பில் வினவியபோதே சு.கவின் பொதுச்செயலாளர், மேற்படி தகவலை வெளியிட்டதுடன், கட்சிசார்ந்த கூட்டங்களை சந்திரிக்கா அம்மையாரே புறக்கணித்துவருகின்றார். சுதந்திரக்கட்சியின் கதவு கட்சி தொண்டர்களுக்காகவும், உறுப்பினர்களுக்காகவும் திறந்தே இருக்கின்றது. எந்நேரத்தில் வேண்டுமானாலும் வரலாம். அதற்கு எவ்வித தடையும் இல்லை. தாய்வீட்டுக்கு வருவதற்கு எதற்கு அழைப்பு?” என்று கேள்வி எழுப்பினார்.