மாற்றுவழி தேடுகிறார் மைத்திரி! புதிய பிரதமராக சமல் ராஜபக்ச?
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியைச் சேர்ந்த, சமல் ராஜபக்ச அல்லது நிமல் சிறிபால டி சில்வாவை, கூடிய விரைவில் பிரதமராக நியமிப்பது குறித்து, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஆலோசித்து வருவதாக, கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
பிரதமர் பதவிக்கு ரணில் விக்கிரமசிங்கவையே நியமிக்க வேண்டும் என்பதில் ஐக்கிய தேசிய முன்னணி உறுதியாக நிற்கின்றது. எனினும், இதற்கு பச்சைக்கொடிகாட்ட ஜனாதிபதி மறுத்துவருகிறார்.
இந்நிலையிலேயே மாற்று நடவடிக்கை குறித்து மைத்திரி சிந்திக்கின்றார் என்றும், சமல் ராஜபக்ச, அல்லது நிமல் சிறிபால டி சில்வாவை பிரதமராக நியமிப்பது குறித்து ஆலோசித்து வருகின்றார் என்றும் தெரியவருகின்றது.
எனினும், இதுதொடர்பில் இன்னும் உத்தியோகபூர்வமாக எவ்வித தகவல்களும் வெளியாகவில்லை. நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையான ஆதரவைப் பெறுபவரையே ஜனாதிபதி, பிரதமர் பதவிக்கு நியமிக்கவேண்டும்.
இருந்தாலும் நிறைவேற்று அதிகாரத்தைப் பயன்படுத்தி இறுதிநேரத்தில் மைத்திரி மேற்படி தீர்மானத்தை எடுக்ககூடும் என்றும், இதனால் கொழும்பு அரசியல் களம் மேலும் சூடுபிடிக்கும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.