மைத்திரியின் ஆவேசப் பேச்சால் மதங்கொண்டது யானைப் படை! – குற்றப் பிரேரணை கொண்டுவரவும் முடிவு

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க மீது வகைதொகையின்றி குற்றச்சாட்டுகளை முன்வைத்து கடுமையாக இன்று விளாசித்தள்ளிய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு, ஐக்கிய தேசியக் கட்சி பதிலடி கொடுத்துள்ளது.

“மைத்திரி ஆட்சிக்குப் பொருத்தமற்றவர். அவருக்கு எதிராகக் குற்றப் பிரேரணை கொண்டு வருவதே ஒரே வழி” என்று ஐ.தே.கவின் மூத்த உறுப்பினரான மங்கள சமரவீர எம்.பி. தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றை இட்டுள்ள அவர்,

“ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மாநாட்டில் ஜனாதிபதி நிகழ்த்திய உரையானது அவர் ஆட்சிக்குப் பொருத்தமற்றவர் என்பதை நியாயமான சந்தேகங்களுக்கு அப்பால் நிரூபிக்கின்றது. பொய்கள், முரண்பாடு, உணர்ச்சிவசம் மற்றும் பாரபட்சம் ஆகியவை அவருடைய வரிசைப்பாட்டிலும் ஒழுங்கமைப்பிலும் பொருந்தியது. அவருக்கு எதிராக குற்றவியல் பிரேரணை ஒன்றைக் கொண்டு வருவதே ஒரே தீர்வு” என்று குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை, பிரதான கட்சியாக விளங்கிய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை மூன்றாம் நிலைக்குத் தள்ளிய மைத்திரிபால சிறிசேன, ஐக்கிய தேசியக் கட்சி குறித்தும் அதன் தலைவர் பற்றியும் பேசுவது கேலிக்கூத்தாகும் என்றும் ஐ.தே.க. உறுப்பினர்கள் விமர்சித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *