ஐ.தே.க. தலைமையில் இடைக்கால அரசு – விடைபெறுகிறார் மஹிந்த! நாளை விசேட அறிவிப்பு!!
நாட்டில் அரசியல் நெருக்கடி உச்சம்தொட்டுள்ள நிலையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ச நாளை (02) விசேட அறிவிப்பொன்றை விடுக்கவுள்ளார்.
ஆட்சியமைப்பதற்குரிய பெரும்பான்மை பலத்தை (113) ஐக்கிய தேசியக்கட்சி தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணி உறுதிப்படுத்தியுள்ளதால் பிரதமர் பதவியை துறக்கும் முடிவையே மஹிந்த அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
நவம்பர் 26 ஆம் திகதி முதல் டிசம்பர் முதலாம் திகதிவரை நடைபெற்ற அரசியல் நிகழ்வுகள் தொடர்பில் நாட்டு மக்களுக்கு தெளிவுபடுத்தவுள்ள மஹிந்த, பொதுத்தேர்தலை உடனடியாக நடத்துவதற்குரிய வலியுறுத்தலை விடுப்பார் என தெரியவருகின்றது.
அதேவேளை, ஐக்கிய தேசியக்கட்சிக்கும் அதன் பங்காளிக்கட்சிகளுக்கும் அதிர்ச்சி வைத்தியம் கொடுக்கும் வகையில்கூட மஹிந்தவின் அறிவிப்பு அமையலாம் என அவருக்கு நெருக்கமானவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இதற்கிடையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் 4 ஆம் திகதி விசேட அறிவிப்பொன்றை விடுக்கவுள்ளார் என்று சுதந்திரக்கட்சி உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.