நான்கு நாட்களுக்குள் பெரும்பான்மை உறுதி! நாடாளுமன்றத் தேர்தல் வர்த்தமானி வாபஸ்!!

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதாக வெளியான வர்த்தமானி அறிவித்தலை மீளப் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

மைத்திரி – மஹிந்த தலைமையிலான குழுவினர் பெரும்பான்மைப் பலத்தைப் பெற்றவுடன் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது என அவர் கூறியுள்ளார்.

தென்னிலங்கை ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய விசேட செவ்வியில் அமைச்சர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

“எதிர்வரும் 4 நாட்களுக்குள் சமகால அரசால் நாடாளுமன்ற உறுப்பினர்களின் 113 என்ற பெரும்பான்மை உறுதியாக நிரூபிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பெரும்பான்மை நிரூபித்த பின்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்காக விடுக்கப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் மீளப்பெறப்படும்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதற்கமைய ஆயுட்காலம் முடியும் வரை நாடாளுமன்றம் தொடர்ந்து செயற்படுத்தப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கடந்த 9ஆம் திகதி நாடாளுமன்றம் கலைப்பட்டதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் அறிவிக்கப்பட்டதுடன், அடுத்த வருட ஆரம்பத்தில் தேர்தல் நடைபெறும் என வர்த்தகமானி வெளியிடப்பட்டது. ஜனாதிபதியின் இந்த நடவடிக்கைக்கு எதிராக உயர்நீதிமன்றம் அடுத்த மாதம் 7ஆம் திகதி வரை இடைக்காலத் தடை விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *