பெரும்பான்மைப் பலம் இல்லாத அரசு எதற்கு? – மஹிந்த அணியிடம் குமார வெல்கம கேள்வி
நாடாளுமன்றத்தில் பெரும்பான்மைப் பலம் இல்லாமல், ஆளும்கட்சியாகத் தொடர்வதாகக் கூறுவதும், அரச ஆசனங்களை அடாவடித்தனமாக கைப்பற்றியிருப்பதும் தவறானது என்று மஹிந்த அணியின் நாடாளுமன்ற உறுப்பினர் குமார் வெல்கம தெரிவித்தார்.
நேற்று நடந்த குழப்பங்களை அடுத்து கருத்து வெளியிட்டுள்ள அவர்,
“புதிய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையில் எமது வாக்குகளை அளிக்க முடியும். ஆனால், எமது கட்சியில் உள்ள சில சக்திகள் அதனை அனுமதிக்கவில்லை.
மஹிந்த ராஜபக்ஷ ஒரு மதிநுட்பமான அரசியல்வாதி என்பதை நான் அறிவேன். இதனை அவர் அனுமதிக்கமாட்டார்.
அவர்களுக்குப் பெரும்பான்மை பலம் இல்லையென்றால் எதற்காக ஓர் அரசை உருவாக்க வேண்டும்?
நாடாளுமன்றத்தில் நடந்த குழப்பங்களை வெளிநாட்டு இராஜதந்திரிகள் ஒளிப்பதிவு செய்து கொண்டார்கள்.
அவர்கள் அதனை உலகம் முழுவதும் அனுப்புவார்கள். இது எமது நாடு பற்றி உலகம் குறைத்து மதிப்பிடவே உதவும்” – என்று தெரிவித்தார்.