பரபரப்புக்கு மத்தியில் 7ஆம் திகதி கூடுகின்றது நாடாளுமன்றம்! – ஆட்சியைக் கைப்பற்ற இரு தரப்பும் பிரயத்தனம்
பெரும் அரசியல் பரபரப்புக்கு மத்தியில் நாடாளுமன்றம் எதிர்வரும் 7ஆம் திகதி கூடவுள்ளது. முன்னதாக 5ஆம் திகதியே கூடும் என அறிவிக்கப்பட்டிருந்தாலும் தீபாவளி விடுமுறை உட்பட மேலும் சில காரணிகளைக் கருத்தில்கொண்டே மேற்படி திகதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் ஐ.தே.க., ஜே.வி.பி., கூட்டமைப்பு ஆகிய எம்.பிக்களுடன் நாடாளுமன்றக் குழு அறையில் இன்று முற்பகல் சபாநாயகர் கரு ஜயசூரிய நடத்திய சந்திப்பின்போதே நாடாளுமன்றம் கூடவுள்ள திகதியை அறிவித்தார்.
பிரதமர் பதவியிலிருந்து ரணில் விக்கிரமசிங்கவை நீக்கிவிட்டு அந்தப் பதவிக்கு மஹிந்த ராஜபக்ஷவை நியமித்து புதிய அரசொன்றை அமைத்த கையோடு நாடாளுமன்றத்தை எதிர்வரும் 16ஆம் திகதிவரை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஒத்திவைத்தார்.
மைத்திரியின் இந்த முடிவுக்கு பிரதான அரசியல் கட்சிகளும், வெளிநாட்டுத் தூதரகங்களும் கடும் எதிர்ப்பை வெளியிட்டிருந்தன. இவ்வாறானதொரு பின்புலத்திலேயே ஒத்திவைக்கப்பட்ட சபையை முன்கூட்டியே கூட்டும் முடிவை மைத்திரி எடுத்துள்ளார்.
அதேவேளை, நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்கும் முயற்சியில் ரணில் தரப்பும் மைத்திரி – மஹிந்த தலைமையிலான தரப்பும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இன்றைய தினமும் முக்கியத்துவமிக்க சந்திப்புகள் இடம்பெற்று வருகின்றன.