இலங்கையில் மனித உரிமை குறித்து ஐ.நா.அதிருப்தி!

இலங்கையின் மனித உரிமை நிலைமைகள் குறித்து ஐக்கிய நாடுகள் அமைப்பின் இணைக்குழு அதிருப்தி வெளியிட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட 46/1 தீர்மானத்திற்கு அமைய இணங்காணப்பட்ட மனித உரிமை விவகாரங்களில் எதிர்பார்க்கப்பட்ட முன்னேற்றம் பதிவாகவில்லை என சுட்டிக்காட்டியுள்ளது.

ஐக்கிய நாடுகள் அமைப்பின் இலங்கை தொடர்பான இணைக்குழுவினால் இவ்வாறு அதிருப்தி வெளியிடப்பட்டுள்ளது.

மனித உரிமை பாதுகாப்பு குறிப்பாக சிறுபான்மை மதத்தவர்களின் மனித உரிமை விவகாரங்களில் அரசாங்கம் உரிய முனைப்பு காண்பிக்கத் தவறியுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

அண்மைய கால மனித உரிமை நிலைமைகள் குறித்தும் அதிருப்தி வெளியிடப்பட்டுள்ளது.

குற்றப்புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகரவின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.

பயங்கரவாத தடைச்சட்டம் பயன்படுத்தப்பட்டு வரும் விதம் குறித்து கரிசனை கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ், ஆசிரியர் அனாப் ஜாசீம் ஆகியோர் குற்றச்சாட்டுக்கள் இன்றி தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்தியே இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் சிறுபான்மை சமூக அரசியல் தலைவர்களும் இந்த சட்டத்தின் கீழ் கைது செய்து தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது.

கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் நேரிடும் மரணங்கள் தொடர்பில் பக்கச்சார்பற்ற சுயாதீன விசாரணை நடாத்தப்பட வேண்டுமென இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் விடுத்துள்ள கோரிக்கையுடன் தாமும் இணைந்து கொள்வதாக ஐக்கிய நாடுகளின் இலங்கை குறித்த இணைக்குழு தெரிவித்துள்ளது.

46/1 தீர்மானத்தை அமுல்படுத்துவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டுமென இலங்கை அரசாங்கத்தை ஊக்கப்படுத்துவதாக தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *