தென்கிழக்குப் பல்கலையில் பதற்றம்! 15 மாணவர்கள் கைது!! பொலிஸார் குவிப்பு!!!

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் நிர்வாகக் கட்டடத்தை ஆக்கிரமித்து போராட்டம் நடத்திய 15 மாணவர்கள் இன்று பகல் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இதனையடுத்து அங்கு பதற்றம் நிலவுகின்றது. பல்கலைக்கழக வளாகத்தை சுற்றிப் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் நிர்வாகக் கட்டடத்தை, தொழில்நுட்ப துறையைச் சேர்ந்த சில சிங்கள மாணவர்கள், கடந்த இரண்டு வார காலமாக ஆக்கிரமித்துப் போராடி வருகின்றனர்.

பகிடிவதையில் ஈடுபட்ட குற்றத்துக்காக, பல்கலைக்கழகத்திலிருந்து விலக்கப்பட்டுள்ள, தகவல் தொழில்நுட்ப துறையைச் சேர்ந்த 4 மாணவர்களை மீளவும் சேர்த்துக் கொள்ளுமாறு வலியுறுத்தி, மேற்படி மாணவர்கள், நிர்வாகக் கட்டடத்துக்குள் புகுந்து, அதனை ஆக்கிரமித்து போராடி வருகின்றனர்.

இதன் காரணமாக, பல்கலைக்கழக நிர்வாக மற்றும் நிதி நடவடிக்கைகள் கடந்த இரு வாரங்களாக முடங்கியுள்ளன.

இந்நிலையில், பல்கலைக்கழக நிர்வாக கட்டடத்தை ஆக்கிரமித்துள்ள மாணவர்களை அங்கிருந்து அகற்றுமாறு, பொலிஸாருக்கு, அக்கரைப்பற்று நீதிவான் நீதிமன்றம் ஏற்கனவே கட்டளை பிறப்பித்திருந்த போதிலும் மாணவர்கள் வௌியெற்றப்படவில்லை.

இதனையடுத்து பல்கலைக்கழகத்தின் நிர்வாகக் கட்டடத்தை ஆக்கிரமித்து போராட்டம் நடத்திய 15 மாணவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

(இரண்டாம் இணைப்பு)

முதலாம் திகதி வரை
15 பேருக்கும் மறியல்

குறித்த 15 மாணவர்களும் அக்கரைப்பற்று நீதிவான் நீதிமன்றத்தில் இன்று மாலை ஆஜர்படுத்தபட்டனர். அவர்களை அடுத்த மாதம் முதலாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிடப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *