ஒரு இலட்சத்து 20 ஆயிரமாக உயர்ந்தது இடரால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை!
வடக்கின் ஐந்து மாவட்டங்களிலும் ஏற்பட்டுள்ள வெள்ளத்தால், 38 ஆயிரத்து 739 குடும்பங்களைச் சேர்ந்த ஒரு இலட்சத்து 19 ஆயிரத்து 962 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஆயிரத்து 528 குடும்பங்களைச் சேர்ந்த 4 ஆயிரத்து 906 பேர் இடர்பெயர்ந்து 19 இடைத்தங்கல் முகாம்களில் தொடர்ந்து தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
கிளிநொச்சி மாவட்டத்திலேயே அதிகளவாக 74 ஆயிரத்து 730 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நேற்று மாலை 6 மணிவரையான நிலவரப்படி இடர் முகாமைத்துவ நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விவரம் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-
முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பிரதேச செயலர் பிரிவில் 2 ஆயிரத்து 322 குடும்பங்களைச் சேர்ந்த 7 ஆயிரத்து 286 பேர் வெள்ள இடரால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அப்பிரதேசத்தில் 542 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.
புதுக்குடியிருப்பு பிரதேச செயலர் பிரிவில் 5 ஆயிரத்து 285 குடும்பங்களைச் சேர்ந்த 16 ஆயிரத்து 860 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் ஆயிரத்து 265 குடும்பங்களைச் சேர்ந்த 807 பேர் 3 தற்காலிக முகாங்களில் தொடர்ந்து தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
அப்பிரதேசத்தில் 82 வீடுகள் முழுமையாகவும் ஆயிரத்து 681 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன.
துணுக்காய் பிரதேச செயலர் பிரிவில் 331 குடும்பங்களைச் சேர்ந்த ஆயிரத்து 4 பேர் வெள்ள இடரால் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன், 7 தொழில் முயற்சிகள் அழிவடைந்துள்ளன.
கரைதுறைப்பற்று பிரதேச செயலர் பிரிவில் ஆயிரத்து 719 குடும்பங்களைச் சேர்ந்த 5 ஆயிரத்து 483 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அப்பிரதேசத்தில் 4 வீடுகள் முழுமையாகவும் 73 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன.
மாந்தை கிழக்கு பிரதேச செயலர் பிரிவில் 439 குடும்பங்களைச் சேர்ந்த ஆயிரத்து 271 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வெலி ஓயா பிரதேச செயலர் பிரிவில் 8 குடும்பங்களைச் சேர்ந்த 19 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு வீடு பகுதியளவில் சேதமடைந்துள்ளது.
கிளிநொச்சி, கரைச்சிப் பிரதேச செயலர் பிரிவில் 11ஆயிரத்து 326குடும்பங்களைச் சேர்ந்த 35 ஆயிரத்து 202 பேர் வெள்ள இடரால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் 791குடும்பங்களைச் சேர்ந்த 2 ஆயிரத்து 508 பேர் 6 இடைத்தங்கல் முகாங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
அப்பிரதேசத்தில் வெள்ளத்தால் 350 வீடுகள் முழுமையாகவும் 759 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன.
கண்டாவளை பிரதேச செயலர் பிரிவில் 7 ஆயிரத்து 865 குடும்பங்களைச் சேர்ந்த 25 ஆயிரத்து 720 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் 370 குடும்பங்களைச் சேர்ந்த ஆயிரத்து 272 பேர் 4 தற்காலிக முகாங்களில் தொடர்ந்து தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
கண்டாவளை பிரதேசத்தில் வெள்ளத்தால் 33 வீடுகள் முழுமையாகவும் 789வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.
பூநகரி பிரதேச செயலர் பிரிவில் 2 ஆயிரத்து 775 குடும்பங்களைச் சேர்ந்த 6 ஆயிரத்து 538 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் 39 குடும்பங்களைச் சேர்ந்த 127 பேர் ஒரு தற்காலிக முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
அப்பிரதேசத்தில் வெள்ளத்தால் 3 வீடுகள் முழுமையாகவும் 530 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.
பச்சிளைப்பளை பிரதேச செயலர் பிரிவில் 2 ஆயிரத்து 218 குடும்பங்களைச் சேர்ந்த 7 ஆயிரத்து 270 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் 13 குடும்பங்களைச் சேர்ந்த 38 பேர் ஒரு தற்காலிக முகாங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
அப்பிரதேசத்தில் வெள்ளத்தால் 145 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.
மன்னார் நகர் பிரதேச செயலர் பிரிவில் 27 குடும்பங்களைச் சேர்ந்த 85 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் ஒரு இடைத்தங்கல் முகாமில் தங்கியுள்ளனர்.
நானாட்டன் பிரதேச செயலர் பிரிவில் காற்றின் தாக்கத்தால் 12 குடும்பங்களைச் சேர்ந்த 56 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம், மருதங்கேணி பிரதேச செயலர் பிரிவில் 4 ஆயிரத்து 257 குடும்பங்களைச் சேர்ந்த 12 ஆயிரத்து 642 பேர் வெள்ள இடரால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் 6 குடும்ங்களைச் சேர்ந்த 10 பேர் ஒரு தற்காலிய முகாமில் தங்கியுள்ளனர்.
கடல் அலையில் இழுத்துச் செல்லப்பட்டு ஒருவர் உயிரிழந்துள்ளார். 2 தொழில் முயற்சிகள் அழிவடைந்துள்ளன.
வவுனியா வடக்கு பிரதேச செயலர் பிரிவில் 155 குடும்பங்களைச் சேர்ந்த 526 பேர் வெள்ள இடரால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் 23 குடும்பங்களைச் சேர்ந்த 71 பேர் இரண்டு இடைத்தங்கல் முகாங்களில் தங்கியுள்ளனர். அத்துடன் அப்பிரதேசத்தில் 2 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.