ஆவா குழுவுக்கு பொலிஸார் வலை வீச்சு! – யாழில் தொடர்கின்றது தேடுதல் நடவடிக்கை
யாழ் குடாநாட்டில் அதிகரித்திருக்கும் ஆவா குழுவின் குற்றச்செயல்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில் பொலிஸாரின் விசேட தேடுதல் நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
நேற்றிரவு முதல் இந்த விசேட நடவடிக்கை ஆரம்பமானது.
இந்த விசேட தேடுதல் மற்றும் வீதி சோதனை நடவடிக்கைகளுக்கு வடக்கு மாகாணத்தின் பல பகுதிகளிலிருந்தும் 200 இற்கும் அதிகமான பொலிஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
வடக்கு மாகாணத்துக்கான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபரின் கட்டளையின் கீழ் மன்னார் மற்றும் வவுனியா மாவட்டங்களிலிருந்து மேலதிக பொலிஸார் யாழ்ப்பாணத்துக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களுடன் யாழ் குடாநாட்டின் பல்வேறு பகுதிகளிலுள்ள பொலிஸ் நிலையங்களைச் சேர்ந்த பொலிஸார் இரவுநேர வீதிச் சோதனை மற்றும் தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
யாழ். குடாநாட்டில் அதிகரித்துள்ள குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்தும் நோக்கிலேயே இந்த விசேட நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது எனப் பொலிஸார் தெரிவித்தனர்.