இலங்கைக்கு படையெடுத்துள்ள வெட்டுக்கிளிகள்!
வெட்டுக் கிளிகள் பெரிய அளவில் கூட்டம் கூட்டமாக படையெடுத்து வருபவை . இவை, விளைச்சலுக்கு நிற்கும் பயிர்களை உண்டு, விவசாயிகளை பெரிதும் துயரத்தில் ஆழ்த்துகின்றன.
பல ஆண்டுகளாகவே வெட்டுக்கிளிகளின் படையெடுப்பு அவ்வப்போது நடைபெற்று தான் வருகிறது. மத்திய ஆசிய நாடுகளான ஈரான் உள்ளிட்ட பாலைவன நாடுகளில் இருந்து உருவாகும் இந்த வெட்டுக்கிளிகள் ஒரே நாளில் 150 கிமீ., தொலைவுக்கு பயணிக்கும் ஆற்றல் கொண்டவை.
இந்த பாலைவன வெட்டுக் கிளிகள் உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், குஜராத், பஞ்சாப் என இந்தியாவின் பல மாநிலங்களுக்கும் படையெடுத்து உணவுப் பயிர்களையும் தாவர இனங்களையும் நாசம் செய்து வருகின்றன. இந்த வெட்டுக்கிளிகளின் தாக்குதல் இப்போது விவசாயிகளுக்கு பெரும் வேதனையை அளித்து வருகிறது.
இந்த வெட்டுக்கிளிகளின் படையெடுப்பால் இந்தியாவின் 12 மாநிலங்களிலுள்ள விவசாயிகள் பெரும் அச்சுறுத்தலை எதிர்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் இலங்கையில் குருநாகல் – மாவத்தகம பகுதியில் வெட்டுக்கிளிகளின் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதோடு பயிர்கள் சேதமாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, கிருமிநாசினியைப் பயன்படுத்தி அழிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விவசாய பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.