‘டயானா கமகே மீது தாக்குதல்’ இராஜாங்க அமைச்சர் விசாரணைக்கு அழைப்பு
இராஜாங்க அமைச்சர் டயானா கமகே மீது பாராளுமன்றத்தின் நூலக வளாகத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான சுஜித் சஞ்சய பெரேரா மற்றும் ரோஹன பண்டார ஆகியோர் தாக்குதல் நடத்தியதாக குற்றச்சாட்டு முன்வைத்திருந்தார்.
அத்துடன், டயானா கமகே இதுதொடர்பில் சபாநாயகரிடமும் வெலிக்கடை பொலிஸிலும் முறைப்பாடு செய்திருந்தார்.
இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ தலைமையில் குழுவொன்று நியதிக்கப்பட்டது.
பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ தலைமையில் இந்த குழுவின் முதலாவது கூட்டம் நேற்று நடைபெற்றதுடன், இதில் குழுவின் உறுப்பினர்களான சமல் ராஜபக்ஷ, ரமேஷ் பத்திரன, கயந்த கருணாதிலக மற்றும் இம்தியாஸ் பாக்கீர் மார்க்கர் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இந்தக் கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பிரதி சபாநாயகர், இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த சம்பவத்தின் முக்கிய சாட்சியாக அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இதன்படி, சாட்சியம் பெறுவதற்காக அவர் எதிர்வரும் நவம்பர் மாதம் 06ஆம் திகதி நடைபெறவுள்ள குழுக் கூட்டத்திற்கு அழைக்கப்படுவார்.
அதன் பின்னர், இராஜாங்க அமைச்சர் டயானா கமகே மற்றும் பிரதான எதிர்க்கட்சியின் இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களும் விசாரணைக் குழுவின் முன் அழைக்கப்படவுள்ளனர்.
இன்றைய கூட்டத்தின் போது, “குழு உறுப்பினர்கள் தொடர் விசாரணைகளுக்காக இரண்டு பெண் எம்.பி.க்களின் உதவியை நாடவும் முடிவு செய்துள்ளனர்.
குற்றம் உறுதிப்படுத்தப்படும் எம்.பி.க்கள் எந்த பதவியில் இருந்தாலும் அவர்களுக்கு எதிராக உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும்.” என பிரதி சபாநாயகர் உறுதியளித்தார்.
பாராளுமன்றத்தில் நடந்த இந்த சம்பவத்தை தொடர்ந்து, எம்.பி.க்களின் நடத்தையை மேற்பார்வையிட சுதந்திரமான அமைப்பொன்றை நிறுவுவதற்கு கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.