இஸ்ரேல் – பாலஸ்தீன மோதலில் இலங்கைப் பெண் சுட்டுக்கொலை
இஸ்ரேலுக்கும் பலஸ்தீனத்துக்கும் இடையில் நடைபெற்ற வரும் மோதலில் நேற்று காணாமல்போனார் என்று கூறப்பட்ட இலங்கைப் பெண் உயிரிழந்துள்ளார் எனச் சந்தேகிக்கப்படுகின்றது என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் ஊடகப் பேச்சாளர் காமினி செனரத் யாப்பா தெரிவித்தார்.
சமூக ஊடகங்களில் கிடைத்த தகவலின் அடிப்படையில் அந்தப் பெண் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகின்றது எனவும் அவர் குறிப்பிட்டார்.
கம்பஹாவைச் சேர்ந்த 49 வயதான இரண்டு பிள்ளைகளின் தாயே இவ்வாறு கொல்லப்பட்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகின்றது.
அவர் 2022 ஆம் ஆண்டு வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் ஊடாக இஸ்ரேலுக்குத் தாதியாகப் பணிபுரியச் சென்றுள்ளார்.
இஸ்ரேலின் தற்போதைய சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகளுக்கு இணங்க, இராஜதந்திர தலையீட்டின் அடிப்படையில் உயிரிழந்த பெண்ணின் சடலத்தை இலங்கைக்குக் கொண்டு வர முடியும் என நம்புவதாகவும் காமினி செனரத் யாப்பா தெரிவித்தார்.
மேலும், வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்திடம் இருந்து அவருக்கு வழங்க வேண்டிய அனைத்து காப்பீடு மற்றும் இழப்பீட்டுத் தொகையை வழங்கவுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.