இலங்கைக்கு எதிரான போட்டியில் வரலாற்று வெற்றியைப் பெற்றது பாகிஸ்தான்!

2023 உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடரில் இன்று இடம்பெற்ற போட்டியில் இலங்கை அணியை 6 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி வீழ்த்தி வெற்றிப் பெற்றுள்ளது.

ஹைதராபாத் மைதானத்தில் இன்று பிற்பகல் 2 மணிக்கு ஆரம்பமான இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 50 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுக்களை இழந்து 344 ஓட்டங்களை பெற்றது.

இலங்கை அணி சார்பில் குசல் மெந்திஸ் 122 ஓட்டங்களையும் சதீர சமரவிக்ரம 108 ஓட்டங்களையும் பெத்தும் நிஸ்ஸங்க 51ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்து வீச்சில் பாகிஸ்தான் அணி சார்பில் ஹசன் ஹலி 4 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

இதற்கமைய 345 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 48.2 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுக்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

பாகிஸ்தான் அணி சார்பில் அதிரடியாக துடுப்பெடுத்தாடிய மொஹமட் ரிஷ்வான் ஆட்டமிழக்காது 131 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார்.

அப்துல்லா ஷபீக் 113 ஓட்டங்களையும், சவுத் ஷகீல் 31 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.

பந்து வீச்சில் டில்ஷான் மதுசங்க அதிகபட்சமாக இரண்டு விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *